ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அறிய அரச புலனாய்வு சேவை (SIS) யிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சமுதிதாவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிலியந்தலை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக சமுதிதவுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையிடம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் கோரியுள்ளதாக அவர் கூறினார்.
எனினும் குறித்த வழிகாட்டுதல் கிடைக்கும் வரை சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரசேகர தெரிவித்தார். சம்பவத்தன்று நள்ளிரவு 12.00 மணியளவில் பொலிஸார் சமுதிதவின் வீட்டிற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அப்பகுதியில் பொலிஸார் ரோந்துப் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, சம்பவ தினத்தன்று 92 சிசிடிவி கமெராக்களில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டு அவதானிக்கப்படுவதாகவும், தெளிவில்லாத சில காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அரசியல் இலபாத்திற்காக ஊடக சுதந்திரம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
எவ்வாறாயினும், இதற்கு பதில் அளித்த சஜித்த பிரேமதாச தமது கட்சி ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கவில்லை எனவும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது தவறானது எனவும் தெரிவித்தார்.
கடந்த 14ம் திகதி ஊடகவியலாளர் சமுதித்தவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்நிலையில் தமக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென ஊடகவியலாளர் சமுதித்த பிலியந்தல நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்த போதிலும் தமக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சமுதித்த குற்றம் சுமத்தியிருந்தார்.
இன்று பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எதிர்கட்சி தலைவர் இன்று கேள்வி எழுப்பிய நிலையில் நேற்று இரவு ஊடகவியலாளர் சமுதிதவின் இல்லத்தில் சில பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.