இலங்கைக்கு ஒன்லைனில் விசாக்களை வழங்கும் இணையத்தளத்தில் மோசடி!இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டினருக்கு ஒன்லைனில் விசாக்களை பெற்றுக் கொள்வதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போன்று போலி இணையதளம் செயல்பட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடியால் நாட்டுக்கு கிடைக்கவேண்டிய பெருந்தொகை வருமானம் ஏற்கனவே இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
www.etagov.la/svisa என்ற பெயரில் இந்த போலி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், eta.gov.lk என்ற பெயரில் செயற்படும் அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் உள்ள அனைத்து அம்சங்கள் மற்றும் தகவல்கள் இதிலும் காணப்படுகின்றன.
குறித்த போலியான இணையத்தளத்தின் வடிவமைப்பும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வடிவமைப்பும் ஒத்திருக்கின்றது.இந்த இணையதளத்தின் மூலம் விசாவிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகாரப்பூர்வ கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.
மேலும், போக்குவரத்து விசாவிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கட்டணம் அறவிடப்படுவதில்லை, ஆனால் இந்த போலித் தளத்தில் இதற்கும் 7 அமெரிக்க டொலர்கள் கட்டணம் அறவிடப்படுகின்றது.
இந்த போலியான இணையத்தள மோசடியில் அரச தரப்பின் எவருக்கேனும் தொடர்பு உள்ளதா அல்லது இலங்கைக்கான விசா வழங்கல் மூன்றாம் தரப்பினரின் மோசடியா என்பது குறித்து சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இதற்கு உடனடி மற்றும் சரியான நடவடிக்கையை சம்மந்தப்பட்ட தரப்பு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.