அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னதாக அறிவித்திருந்த போதிலும் நாட்டில் கிட்டத்தட்ட 5 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை இடம்பெற்றுவம் நிலையில் இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின்வெட்டு காரணமாக பல நிறுவனங்கள் தமது வேளைநேரத்தையும் உற்பத்தியையும் குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மின்சாரம் தயாரிக்க தினமும் 4,000 மெட்ரிக் தொன் எரிபொருள் தேவைப்படும் நிலையில் நேற்று 2,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் 550 மெகாவோல்ட் மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனிடையே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்கள் டொலர் இன்மையினால் கடந்த மூன்று நாட்களாக துறைமுகத்திலேயே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வந்திருக்கும் எண்ணெய் கப்பல்களை விடுவிப்பதற்கு அரசாங்கத்திடம் 36 மில்லியன் டொலர்கள் இல்லை, என சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (PCR) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை அவர் தெரிவித்தார்.கெரவல பிட்டிய வெஸ்ட் கோஸ்ட் மின் உற்பத்தி நிலையம் நேற்று முதல் 300 மெகாவாட் மின் உற்பத்தியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நாட்டின் இந்த அவல நிலைக்கு அரசாங்கத்தின் நிதி முறைகேடு காரணமாக ஏற்பட்டுள்ள டொலர் கையிருப்பு பற்றாக்குறையே காரணம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நீர் மின் நிலையங்கள் மூலம் 1,383 மெகாவோட் மின்சாரத்தையும் அனல் மின் நிலையங்கள் மூலம் 1,554 மெகாவோட் மின்சாரத்தையும் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் அனல்மின் நிலையம் உட்பட தனியார் துறை மூலம் 614 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இலங்கை மின்சார சபைக்கு போதுமானதாக உள்ளது என்றார்.
இதேவேளை, தற்போது நாட்டில் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் , 7 நாட்களுக்கு தேவையான டீசலும் மாத்திரமே காணப்படுவதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார 3 தினங்களுக்க முன்பு தெரிவித்தார்.
இதனிடையே நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மின் நெருக்கடி குறித்து ஆலோசிப்பதற்காக ஜனாதிபதி தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலங்கை மின்சார சபையின் நிலுவைத் தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், துறைமுகத்தில் சிக்கியுள்ள எரிபொருள் கப்பல்களை விடுவிப்பதற்கு தேவையான நிதியுதவி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.எவ்வாறாயினும், எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 99 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்ற போதிலும் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தை பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.