வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பரப்பில் அத்துமீறிய வகையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இலங்கை பொது மீனவர் சம்மேளத்தினர் இன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீனவர்களின் போராட்டங்களுக்கு என்றும் ஆதரவாக செயற்படும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினைத்திறனாக செயற்படாமையினாலேயே இன்று இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையிலான போராட்டம் பூதாகரமாக மாறியுள்ளது.
அவரால் வினைத்திறனாக செயற்பட முடியாவிட்டால் அவர் பதவி விலக வேண்டும் என நான் பலமுறை கூறிவருகின்றேன்.தமிழக மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு உள்ள அனுதாப உணர்வினை மாற்றும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அவர் அரசாங்கத்தின் கைகூலியாக செயற்படுவதனை விட்டு விட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவ்வாறு தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் போராட்ட வடிவம் மாற்றம்பெரும், குறிப்பாக ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும்.“ என்றார்.
இந்திய மீனவர்கள் ட்ரோலர் படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் குறிப்பாக வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய வகையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதால் வடக்கு மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ளதாக இப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் அத்துமீறிய வகையில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்படுவதை தடுக்கும் வகையில் 2007ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை செயற்படுத்தி இலங்கை கடற்பரப்பில் ட்ரோலர் படகு பயன்பாட்டை தடுக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கையினையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
இப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் வகையில் வடக்கு மீனவர்கள் கடந்த காலங்களில் பாரிய போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள்.இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையின் பாரதூர தன்மையை விளங்கி அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், இந்திய ட்ரோலர் படகு பாவனையினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இலங்கை மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்,“இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினை தடை செய்” போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்றனர்.
இந்த போராட்டத்தில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு ஒன்றியம், தேசிய மீனவ தொழிற்சங்கம், அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் உள்ளிட்ட பல மீனவ சமூக சங்கத்தினர் இப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
14
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
15
16
17
18 19
20
21 22