வடக்கில் 70 வீதமான நிலங்களை மகாவலி அதிகார சபையின் ஊடாகவும், வன இலாகா திணைக்களத்தின் ஊடாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாகவும், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவும் அபகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24 ) தாவர, விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் எஞ்சியுள்ள 30 வீதமான நிலத்தில் தான் மக்கள் வாழ்து வருகின்றனர். தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக நாம் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி மகஜர் கையளிக்க இருந்த நிலையில் அதனை பெற்றுக்கொள்ள ஜனாதிபதியே அல்லது தகுதி வாய்ந்த அமைச்சர்களோ ஆர்ப்பாட்ட இடத்துக்கு வரவில்லை எனவும் தெரிவித்தார்.
வடக்கில் 44 வீதமான காணிகள் வன இலாக்கா திணைக்களத்தின் கீழ் உள்ளது. 392164.6 ஹெக்டேயர் நிலங்கள் இவ்வாறு வன இலாக்கா திணைக்களத்தின் கீழ் உள்ளது.
அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணிப்பாளர் நாயகத்தின் முன்மொழிவுக்கு அமைய 7091.6 ஹெக்டேயர் நிலங்களை பாதுகாக்கப்பட்ட வனமாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் விடுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் எமது எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதத்தையும் உரிய அமைச்சிற்கு கையளித்திருந்தேன்.
தான் மக்கள் வாழ்கின்ற 30 வீதமான நிலத்தில் விவசாயம் செய்ய முடியாது, மேய்ச்சலுக்கு பயன்படுத்த முடியாது பாரிய சிக்கல்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மகாவலி அதிகார சபையினால் வவுனியாவில் 28 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு சிங்கள மக்களை குடியேற்றியுள்ளனர்.
நாம் சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் எமது நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளுக்கே எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.