உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து மோதல்கள் தீவிரமடைந்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அந்நியச்செலவாணியை ஈட்டித்தரும் மிக முக்கிய துறையாக சுற்றுலாத்துறை உள்ளது. கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை தற்போது மெதுவாக மீண்டுவர ஆரம்பித்துள்ளது.
எனினும் 3 ஆவது உலகப்போரா என சர்வதேசத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ள உக்ரைன் -ரஷ்ய மோதல் இலங்கைக்கு மற்றொரு பேர் இடி. இலங்கை வரும் சுற்றுலா பயணிகளில் ரஷ்யர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
கொவிட் தொற்றுநோயின் பின்னர் பெருமளவிலான ரஷ்யர்கள் இலங்கைக்கு வருகைதர ஆரம்பித்துள்ளனர். ஆனால், "சந்தேஷயா பை சரோஜ்" அலைவரிசையிடம் பேசிய அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் வைத்தியர் மொஹமட் ரூமி, உக்ரைன் போர் தொடர்ந்தால், சுற்றுலாத் துறை மட்டுமின்றி, தேயிலைத் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்றார்.
அண்டை நாடான உக்ரைனில் தனது ஜனாதிபதியின் மேற்கத்தியச் சார்பு கொள்கையால் கோபமடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய சார்பு தலைவரை நியமிக்கும் வரை உக்ரைனில் பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இலங்கையில் 1500 உக்ரேனியர்கள்!
இதனிடையே இலங்கைக்கு விஜயம் செய்த 1500க்கும் மேற்பட்ட உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சுமார் 500 உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தனி விமானத்தில் இலங்கை வந்துள்ளனர். உக்ரேனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரேனுக்கான அனைத்து சர்வதேச விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இலங்கை வரும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப முடியாமல் இலங்கையில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. உக்ரைனின் தற்போதைய சூழ்நிலையால், தொலைப்பேசி அல்லது ஒன்லைன் மூலம் அங்கு இருப்பவர்களை தொடர்புகொள்வது மிகவும் கடினம் என உக்ரேன் பிரஜைகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஏற்கனவே ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.