பாராளுமன்றத்திற்குள் டோர்ச் லைட்டை கொண்டு வந்தமை தொடர்பில் தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் டோர்ச் லைட்டுகளுடன் நேற்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சபையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.இந்நிலையில் சபை முதல்வர் தினேஸ் குணவர்தன, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதுடன், டோச் லைட்டுகள் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருள் என்றும், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
எனினும் இதற்கு பதில் அளித்த ஹரீன் பெர்ணான்டோ, சபையில் தற்போது மின்வெட்டு இடம்பெறுவதால் அதனை கொண்டு வருவது தவறு அல்ல. மலசலக் கூடத்திற்கு செல்லும் போது மின்சாரம் தடைப்பட்டால் இது தேவைப்படும்.
அதனால்தான் டொச் லைட்டை கொண்டு வந்துள்ளேன் என்றார்.இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட சபை முதல் தினேஸ் குணவர்தன,பாராளுமன்றத்தில் மின்தடைப்பட்டால் அது சட்டவிரோத செயற்பாடாகவே அமையும். இதனை உடனடியாக தடை செய்யுமாறும் இது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவே இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே ஹரீன் பெர்ணான்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் உரையாற்றிய அவர், நான் பாராளுமன்றத்திற்கு ஏதோவொரு பொதியை எடுத்து வந்ததாக சபாநாயகர், சபை முதல்வர் ஆகியோர் கூறியுள்ளனர்.
நான் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாகவும் சபாநாயகர் கூறியுள்ளார். இதனால் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் என்னைப் பற்றி விசாரணை நடத்துங்கள். அதற்கு நான் ஒத்துழைப்பு வழங்க தயார்.
பாராளுமன்றத்திற்குள் ஏதேனும் பொருளை கொண்டு வரும் போது, எவருக்கும் பாதிப்பு இன்றி கொண்டு வந்த பொருள் தொடர்பிலுயே கதைக்கின்றனர். நான் சிறிய விளையாட்டு டோர்ச் லைட் ஒன்றையே கொண்டு வந்தேன். அதில் ஒன்றும் கிடையாது. இதனால் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நான் கேட்கின்றேன்.இதேவேளை அடுத்தவாரமும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கான ஒரு விடயத்தை செய்யவுள்ளேன். அதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும், பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமையை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுகின்றேன் என்றார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.