ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பிலான விவாதம் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமை பிரதிநிதிகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.இலங்கை தொடர்பிலான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நா-வின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியையும் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மேலும் வல விடயங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இதனிடையே ஐநாவில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது, மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இலங்கை தொடர்பான அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார் என அறியமுடிகிறது.2019 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 40/1 எனும் தீர்மானத்தின் பிரகாரம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான கௌரவம் உள்ளிட்டவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் அவதானிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.
அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பதிலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.இலங்கையின் சார்பில் இந்த அமர்வில் கலந்துகொள்ள, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஆகியோர் ஜெனீவாவுக்கு நேற்று (27) பயணித்துள்ளனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.