வடபகுதி மீனவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பல கட்டமாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். கொழும்பு புகையிரத நிலையம் முன்பாக இன்றும் (28.02.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுயலாப அரசியல் நலன்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் தமது தொழில்முறைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதாக இதன் போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், தெரிவித்தனர்.
விஞ்ஞான ரீதியாக நாரா நிறுவனத்தினால் ஆய்வு செய்து அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொழில் செய்வதற்கு ஏற்றமுறையில் சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூர் இழுவைப் படகுகள் தொடர்பான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் வரையில் நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இழுவைமடி வலைகளைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் இழுவைமடி வலை தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் கடற்றொழிலாளர்களின் எதிர்ப்புக் காரணமாக இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
எனினும், இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எமது கடல் வளத்தை பாதிக்காத வகையில் இழுவைமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக பொருத்தமான சட்ட திருந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“கற்பிட்டி பிரதேசத்தில் இழுவைமடி வலையை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினால், அப்பிரதேசத்தில் குறித்த தொழில் முறையை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்வு வழங்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.