பயங்கரவாத தடைச் சட்டம் கருத்து சுகந்திரம் உள்ளிட்ட ஜனநாயக சுதந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் இலங்கை உறுதியாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு 43 வருடங்களின் பின்னர், அதனைத் திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
"உலகின் ஏனைய நாடுகளை போலவே, பயங்கரவாதத்தை கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு இடையே ஒரு நியாயமான சமநிலையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்," என்று வெளியுறவு அமைச்சர் சபையில் கூறினார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இலங்கையின் அனுமதியின்றி பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 46/1பிரேரணையை ஊடாக பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பிரேரணையின் மூலமாக குறிப்பாக நல்லிணக்க முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்தவும், கடந்த கால நிகழ்வுகளை மீட்பதன் காரணமாக வெறுப்பை வளர்க்க மட்டுமே முடிந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆகவே தாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சாட்சியம் சேகரிக்கும் பொறிமுறையை எதிர்ப்பதாக அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.
இந்த பொறிமுறை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
உறுப்பு நாடுகள் தாமாக முன்வந்து வழங்கும் நிதியை இதற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.