இலங்கையில் தற்போது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள டொலர் உள்ளிட்ட நடைமுறை பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இதனைத் தெரிவித்தார்.கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலின் பின்னரான பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என குறிப்பிட்ட அவர் அதனால் முழு உலக நாடுகளும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது என்றார்.
இவ்வாறான நிலைமையிலேயே நாட்டின் தேசிய பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் இதன் போது கூறினார்.
இவரின் கூறுவதை போன்று கொரோனா பின்னரான சூழலை எதிர்கொண்டுள்ள இலங்கையை போன்ற பொருளாதார நிலைமையை கொண்ட ஏனைய ஆசிய நாடுகள் தமது பொருளாதாரத்தை ஒரு திடமான நிலையில் பேணி வருகின்றன.
கொவிட் பின்னரான நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரின் கூற்றுக்கள், பல தடவைகள் ஏனைய கட்சிகளினாலும் வல்லுனர்களினாலும் நிராகரிக்கப்பட்டவையாகும். எனவே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு ஏதுவான உண்மையான காரணங்களை ஆராய்ந்தன் மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுச்செல்ல முடியும்.
எவ்வாறாயினும் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி ரஷ்யா- உக்ரைன் போர் நிலைமையை அடுத்து மேலும் அதிகரிக்கலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.இந்த போரின் காரணமாக இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த மிக முக்கிய துறைகளான தேயிலை மற்றும் சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இதன் தாக்கம் 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான மின் தடையை நாடு எதிர்கொள்ளக் காரணமாகியுள்ளது. தற்போதைய நிலையில் நாட்டுக்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதில் நாடு பெரும் சவால்களை எதிர்கொள்கின்றது.
இதனால் நாட்டுமக்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.ரஷ்யா- உக்ரைன் மோதல்கள் தொடரும் பட்சத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையிலும் பாரிய உயர்வு ஏற்படலாம்.
இந்த நிலைமையைச் சமாளிக்க சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுவதைப் போன்று எந்த ஒரு நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைப் பெறுவதில் நாடு தற்போது கவனம் செலுத்திவருகின்றது.
நாணய நிதியத்தின் நெறிமுறைகளை நாடு பின்பற்றி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அல்லது அந்நியச் செலாவணி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இன்னும் நீண்டகாலம் தேவைப்படலாம்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.