'வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரம் வழங்காமல் நடமாடும் சேவைகளால் காணி பிரச்சினைகளை தீர்க்க முடியாது" என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண, காணி அமைச்சு கடந்த வார இறுதியில் நடமாடும் சேவையை வவுனியாவில் நடத்தியது.
நடமாடும் சேவை வரவேற்கத்தக்கது தான். ஆனாலும் நம் மக்கள் இந்த சேவையில் நம்பிக்கை அற்று இருக்கின்றார்கள்.
'வருடக்கணக்கில் தீராத தமது காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே மக்கள் வருகின்றனர்.
ஆனாலும் அவர்களின் பிரதேச செயலாளர்கள் கூறும் பதிலையே இச் சேவையும் கூறப்போகின்றது."
என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும், காணிப் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வு காணக்கூடிய வகையில் அமைச்சரவை நேரடியாக முடிவெடுக்க வேண்டும்.
அதேநேரம் வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
அதிகாரங்கள் வழங்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது, ஆனால் அது உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை.
உண்மையில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால், காணி ஆணையாளரால் இப்பிரச்சினைகளை சிரமமின்றி தீர்க்க முடியும்.
'இந்த நடமாடும் சேவை எமது மக்களை ஏமாற்றும் செயலாகும்."