இன்று (03) முதல் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், இன்றைய தினத்திலிருந்து அது வழமைக்கு திரும்பும் எனவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், 37,300 மெற்றிக் தொன் டீசல் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. தாமதமின்றி எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், மின் உற்பத்திக்காக சுமார் 8,000 மெற்றிக் தொன் டீசல் வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு பின்னர் எவ்வித தடையுமின்றி மின்சார விநியோகம் மேற்கொள்ளப்படும், என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் இன்று முதல் முறையாக மக்களிடம் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகவும், மின் தடைக்கான காரணத்தை கண்டறிவதே இதன் நோக்கம் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.