இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு சர்வதேசத்தை நாடியுள்ளது.
'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல்" தொடர்பில் கொழும்பு பேராயர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் மார்ச் 2ஆம் திகதி இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில், சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
கர்தினால் ஜெனீவா செல்வதற்கு முன் வத்திக்கானில், 'போப் பிரான்சிஸ்" உடனான சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கத்தோலிக்க திருச்சபை கர்தினால் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த செய்தியாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தால் அது நடத்தப்படாது என்றும், அது குறித்து எதிர்காலத்தில் தெரிவிக்கப்படும் என்று கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கூறியதாக, ஒரு கிறிஸ்தவ செய்தி இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.