விமல் வீரவங்சவின் அமைச்சுப் பதவியை ஏற்க எஸ்.பி. திஸாநாயக்க ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி அமைச்சுக்குப் பதிலாக கைத்தொழில் அமைச்சை ஏற்குமாறு தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை அவர் மறுத்துள்ளார். இதன்பின்னர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு இந்தப் பதவியை வழங்கலாம் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
விமல் வீரவங்சவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை ஜனாதிபதி வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் கடிதத்தை தனது முகநூலில் பிரசுரித்துள்ள விமல் வீரவங்ச 'நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விமல் வீரவங்சவை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கு மகிந்த ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்ததாகவும், எனினும், விமல் வீரவங்ச நீக்கப்படாவிட்டால் தான் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மகிந்த ராஜபக்ச அந்தக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துவிட்டதாகவும், இதன்பின்னரே விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரை நீக்குவதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், விமல் வீரவங்ச மக்களைக் கவரும் வகையில் பேசக் கூடியவர் என்றும் அவ்வாறான ஒரு பேச்சாளர் எம்மோடு இருக்க வேண்டும் என்றும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவங்சவை நீக்கியதன் பின்னர், எந்தப் பிரச்சினையையும் பேசி சமாளிக்கும் எஸ்.பீ. திஸாநாயக்கவிற்கு இந்தப் பதவியை வழங்கலாம் என்ற சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.