அரசாங்கத்தில் இருந்து விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுகூட்டம் நடத்தி நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை விமர்சித்ததை அடுத்து, குறித்த இருவரும் பதவி நீக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் தாம் அமைச்சரவைக்கு வரப் போவதில்லை என்றும் பசில் ராஜபக்ச ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்பை வெளியிட்டாலும், இறுதியில் குறித்த இருவரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
வாசுதேவ நாணயக்காரவின் பதவி பறிக்கப்படவிருந்த போதிலும் பின்னர் அந்தத் தீர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும், விமல், கம்மன்பில ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டால் தானும் அமைச்சுப் பணிகளை முன்னெடுக்கப் போவதில்லை என்று வாசுதேவ நாணயக்கார பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அத்துடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோரின் தரப்பினர் இன்னமும் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாகவும், எம்.பிக்களாகவும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் எப்போது காலால் இழுப்பார்கள் என்பது குறித்த சந்தேகம் ஆளும் தரப்பில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதுகுறித்து இன்று சனிக்கிழமை விசேட கூட்டமொன்றையும் நடத்தவுள்ளது.
தற்போது அமெரிக்கர் வசமும், குடும்ப வசமும் நாடு சென்றுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் விமல் - கம்மன்பில தரப்பினர் விமர்சித்துள்ளனர்.
நாட்டில் பொதுமக்கள் வீதிகளில் திண்டாடி வரும் நிலையில், விமல் - பசில் அதிகாரப் போட்டி ஜனாதிபதிக்கு தலையிடியாக மாறியுள்ளது, இதனால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி திண்டாடிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், விமல் தரப்பினரை பதவி நீக்கம் செய்தமைக்கு மகிந்த ராஜபக்சவும் அதிருப்தியை வெளியிட்டு அவரும் ஒரு பக்கத்திற்கு சென்றுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.