பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுடன் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்கு மகளீர் அணியினரால் வெள்ளிக்கிழமை(04) நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட போதே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு ரூபங்களில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.
குடும்ப வன்முறைகள் அலுவலக வன்முறைகள் பொதுவான இடங்களில்இடம்பெறும் வன்முறைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற வன்முறைகள் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை மூலம் ஏற்படுகின்ற வன்முறைகள் என பல்வேறு வன்முறைகள் பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன.
யுத்தம் மற்றும் வறுமை போன்ற பல்வேறு அனர்த்தங்களுக்குள் சிக்கித் தவிக்கின்ற எமது சமூகம் இவ்வாறான உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு துரிதமாக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கென மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். என்றார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.