மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அசாதாரணமான வகையில் அதிகரித்து வருகிறது. நாட்டின் டொலர் கையிருப்பு மிகக் குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றது.
மேலும் போதிய மழையின்மையினால் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி பாதிப்படைந்துள்ளதையடுத்து, அதனை ஈடு செய்ய எரிபொருளை பயன்படுத்துவதால் பாரிய செலவு ஏற்படுகிறது.
இவ்வாறான சவாலான நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கான ஒரே வழி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதாகும்.
எனவே அதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்த, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பசில் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் அமைச்சர் பசிலின் இந்தக் கோரிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுவொரு முட்டாள்தனமான செயற்பாடு என பொதுமக்கள் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு வேளையில் வீதி விளக்குகள் இன்மையால் விபத்துக்கள் அதிகரிப்பதுடன், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் வழி வகுக்கும் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் எரிவாயு பிரச்சினை மேலும் உக்கிரமடைந்து வருகிறது. நீண்டகாலத்தை கணக்கிட்டு எடுக்க வேண்டிய முடிவுகளை எடுக்காததே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன எனவும்,
5 ஆம் திகதியின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனக் கூறினர். ஆனால் இன்றும் மின்சாரம் துண்டிப்பு தொடர்பான திட்டத்தை அறிவித்துள்ளனர் என விமல் வீரவங்ச கருத்து தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் இன்று (07) முன்னிலையான பிறகு, நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உச்சமடைய செய்து, நாடு பாரிய நெருக்கடிக்குள் விழுந்த பின்னர், மேற்குலக நாடுகளின் தந்திரத்திற்குள் நாட்டை சிக்க வைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே நிதியமைச்சரின் தேவையாக இருக்கின்றது.
நாட்டில் தற்போது அந்நிய செலாவணி பிரச்சினையே இருக்கின்றது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை வெளியிட முடியாமல் இருக்கின்றது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.