தமிழ் ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முகநூலில் பதிவிட்டதாகக் கூறி, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஊடகவியலாளருக்கு 470 நாட்களின் பின், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போரில் கொல்லப்பட்ட தமிழ் சமூகத்தைப் பற்றி பதிவிட்டதற்காக 15 மாதங்கள் சிறையில் இருந்த தமிழ் ஊடகவியலாளருக்கு, ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்ற தினத்தன்று நீதிமன்றத்தால் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோகுலன் என்று அழைக்கப்படும் ஊடகவியலாளரான கோகுலதாசன் 2 இலட்சம் ரூபா சரீரப்பிணையில், நேற்று (மார்ச் 07) ஆம் திகதி வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனைப் பொலிஸில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு ஊடகவியலாளர் வாழைச்சேனைப் பொலிஸாரால் 2020 டிசம்பர் 28ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS), போரில் இறந்தவர்களை நினைவுகூரும் பதிவையே அவர் பதிவிட்டதாகக் கூறியுள்ளது.
அவரை சிறையில் அடைக்கப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட மக்கள் மனு இயக்கத்துக்கு நாடு முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
“நினைவூட்டல் உரிமையை குற்றமாக மாற்றுவது ஒன்றும் புதிதல்ல. சுதந்திர ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன் 20.11.28 அன்று வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டார். இறந்த தமிழர்கள் பற்றிய கருத்துக்களை எஃப்.பி (FB)-யில் பகிர்ந்ததே அவர் செய்த ஒரே குற்றம்” என்று JDS கூறியது.
எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) கோகுலன் மீதான குற்றச்சாட்டுகளை "அபத்தமானது" என்று கண்டித்துள்ளதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
அடுத்த விசாரணை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட 'டியூப் தமிழ்' யூடியூப் சேனலின் முகுந்தன் திவான்யா மற்றும் விமல் ராஜ் ஆகியோர் ஒரு வருடத்திற்கு முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்னமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளை உயர்த்துவதற்காக அவர்கள் செயற்பட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.