அமெரிக்க டொலருக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரூபாவின் பெறுமதி 230 ரூபாவாக வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில், உடன் நடைமுறைக்கு வரும் வகையிலான அறிக்கை ஒன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இவ் அறிக்கையில், “வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச் 04 இல் அறிவித்திருந்தது.
தோற்றம்பெற்றுவரும் பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்றும்,
தேவைப்பட்டால் பொருத்தமான கொள்கை மாற்றங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்குமெனவும் இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டிருந்தது.
இந்த வகையில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மை சந்தைகளுக்கு அனுமதிக்கப்படுமெனவும்,
வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு ரூ.230 இனை விஞ்சாத மட்டங்களில் இடம்பெறுமென இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.
இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டு சந்தையிலான அசைவுகளை தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன் அதற்கேற்ப பொருத்தமான கொள்கைத் திருத்தங்களை மேற்கொள்ளும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த பெப்ரவரியில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது கடந்த ஜனவரியில் நிலவிய தொகையை விட 02 சதவீதம் குறைவாகும்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.