எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக போதிய எத்தனோல் உற்பத்தி செய்யப்படாமை காரணமாக மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவியிருந்தன.
எனினும் இவ்வாறான செய்தி பொய்யானது என்று அவர் வலியுறுத்தினார்.
குமாரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 23 கலால் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்கள் அரக்கு உட்பட உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்வதாகவும்,
எத்தனோல் உட்பட தேவையான மூலப்பொருட்கள் உள்ளுர் சந்தையில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே ”மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக” வெளியான செய்திகளில் குறிப்பிட்டுள்ளதாவது,
தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனோல் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும்,
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும், 2020 ஜனவரி முதல் எத்தனோல் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாகவும்,
நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர் தெரிவித்ததாகவும்,
டீசல் தட்டுப்பாடு மற்றும் மின் உற்பத்தி, இயந்திரங்களை வாடகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாடு காரணமாக கல்ஓயா சீனி தொழிற்சாலைக்கு மேலதிக செலவுகள் ஏற்படுவதால்,
திட்டமிட்டபடி எத்தனோல் கிடைக்காவிட்டால், மார்ச் 22 முதல் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என, நாட்டின் முன்னணி மதுபான ஆலை, கலால் திணைக்களத்திற்கு அறிவித்திருந்ததாக ஏற்கெனவே வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.