நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, பொது நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
2022, மார்ச் 08 (செவ்வாய்கிழமை) திகதியிடப்பட்ட இது தொடர்பான சுற்றறிக்கையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி,
பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 4.30 வரைக்குமான காலப்பகுதியில் குளிரூட்டிகளை நிறுத்தி வைக்க பொது நிறுவனங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகித்தல்.
மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய உச்சபட்ட நபர்களின் எண்ணிக்கையுடன் பயணித்தல்.
காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது பொது நிறுவனங்களுக்குச் சொந்தமாக 75,000 வாகனங்கள் உள்ளன. "ஒரு வாகனம் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடிந்தால், ஒரு நாளுக்குள் மொத்தம் 75,000 லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடியும்" என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அமைச்சர்கள் மற்றும் பொதுத்துறை அதிகாரிகளுக்கு கூடுதல் எரிபொருளுக்கான பணம் செலுத்துவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.