உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நேற்று கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகின்ற எரிபொருளுக்கு 32 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், சிங்கப்பூர் விலையுடன் இன்று ஒப்பிடுகையில் அது 52 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதன்படி, ஒரு லீற்றர் டீசல் 81 ரூபா நட்டத்திலேயே விநியோகிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த போது எரிபொருள்,அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தியா இலங்கைக்கு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக தெரிவித்திருந்தது.
எனவே இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவி கிடைத்தவுடன், எரிபொருளை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
எனினும், உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால், கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் அளவு குறைவடையும் சாத்தியம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியா கடந்த மாதம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று (9) சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நின்றார்கள்.
மக்கள் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு மணிக்கணக்கில் வரிசையில் நிற்கிறார்கள்.
சிலர் எரிவாயு இல்லாமல் வீடுகளுக்குத் திரும்பும் நிலையும் உள்ளது.
எரிவாயு வாங்க வரும் மக்களிடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றமும் நடக்கிறது.
பல பெட்ரோல் நிலையங்களுக்கு முன்னால், எரிவாயு இல்லை என்ற பலகைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.