அரசாங்கத்தின் தவறான கொள்கை காரணமாக மக்கள் போராட்டமான வாழ்க்கை முறைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் சில அணுகுமுறைகள் காரணமாக தமிழக-வடக்கு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அதிகரித்து செல்வதனால் இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கையாள வேண்டுமெனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தினார்.
நேற்று (9) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்ட மூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டு மக்கள் மிகப்பெரும் போராட்டமான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட வரிசையில் நின்றே அனைத்துப் பொருள்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற சூழ்நிலை எழுந்துள்ளது.
இந்தத் தவறை சுட்டிக்காட்டும் அமைச்சர்களை பதவி நீக்கக்கூடிய அரசாங்கமாக இருக்கிறது இந்த அரசாங்கம்.
இது ஒரு புறமிருக்க, இந்திய இழுவை படகுகளால் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதில் வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகிறார்கள்.
இந்தவிடயம் தொடர்பாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கதைத்த போது, தற்போதைய கடற்தொழில் அமைச்சர் இந்திய பிரதமருடன் நாங்கள் கதைக்கின்றோம், பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கின்றோம் என வாக்குறுதியளித்தார்.
பல தடைவைகள் கடற்தொழில் அமைச்சர் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும் அதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக பல பிரச்சினைகள் அங்கு உருவாகின்றன. இவரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆகவே கிழக்கு மீனவர்களின் பிரச்சினையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு வழங்க வேண்டும்” எனவும், முன்பு கடற்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர இருந்தபோதும் இப்படியான பிரச்சினைகள் வந்தன.
எனினும் அவர் சரியான முறையில் கடற்படையுடன் அணுகி அந்தப்பிரச்சினைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருந்தார்.
மீனவர்கள் மீன்பிடிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போதுள்ள கடற்தொழில் அமைச்சர் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய நிலைமையில் இல்லை. அந்த திறமையும் அவருக்கு இல்லை.
எனவே தான் இப்பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையள வேண்டுமென வலியுருத்துகிறேன்.
கடற்தொழில் அமைச்சரின் அணுகுமுறை காரணமாகத்தான் வடக்கு மீனவர்களின் பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து செல்கின்றது என்றார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.