இந்தியப் பிரதமர் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இலங்கை நிதியமைச்சர் டெல்லி செல்லவுள்ளார்.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில் மேலும் கடனனை கோரும் நிலையில், வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் குழுவொன்று அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக இந்தியாவின் உதவியை நாடும் தருணத்தில் தெற்காசிய பிராந்திய வல்லரசின் கொழும்பு விஜயம் இடம்பெற்றுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ஆம் தேதி நடைபெறும் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடாவின் முயற்சியின் (BIMSTEC) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக டெல்லியில் உள்ள இராஜதந்திர ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பானது பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஒரு பிராந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாகும்.
இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கவுள்ள இந்தியப் பிரதமர், வடக்கிற்கும் பயணிக்கவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபைஅதிகாரத்தை பெற்றுக் கொள்வதில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஆறு தமிழ் கட்சிகளின் தலைவர்களுடனும் இந்திய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியைத் தணிக்க இலங்கை கோரிய 1 பில்லியன் டொலர் கடனுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்தியா விதித்துள்ளதாக வார இறுதியில் செய்திகள் வெளியாகின.
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் மூலோபாய நிலையை வலுப்படுத்த, வடகிழக்கு எரிசக்தி துறையில் இந்திய முதலீட்டை அனுமதிப்பது மற்றும் அமெரிக்க கடற்படை புலனாய்வுத்துறைக்கு முழுமையாக பங்களிப்பதற்கான கடல்சார் ஒப்பந்தங்கள் இந்த விதிமுறைகளில் அடங்கும் என்று சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி நாட்டிற்கு வருவதற்கு முன்னதாக இலங்கை நிதியமைச்சரும் இந்தியா செல்லவுள்ளார். கடன் பெறுவதற்காக டெல்லி செல்ல அவர் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளும் தோல்வியடைந்தன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடலில் இந்திய விஜயம் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
“அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கான வசதியான திகதியை இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் நிர்ணயிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது” என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பாக் ஜலசந்தியில் நிகழும் மீன்பிடி நெருக்கடி குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படுமா என்பது குறித்து தெளிவானத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.