உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ் அலவத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாகவும்,
டீசல் விநியோகிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றன.
இவ்வாறான நிலையில் கேன்களில் எரிபொருளை கொள்வனவு செய்பவர்கள் பின்னர் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, நாட்டினுள் போதுமான அளவு டீசல் காணப்படுவதாகவும் 38,300 மெற்றிக் டொன் நிறையுடைய டீசல் அடங்கிய கப்பலிலிருந்து டீசல் பெறப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,20 ஆயிரம் மெற்றிக் டொன் நிறையுடைய மற்றுமொரு எண்ணெய்த் தாங்கிய கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது தவிர, 37,500 நிறையுடைய எண்ணெய்த் தாங்கிய கப்பலொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும், அவற்றுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வலுசத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
"விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால் விவசாய தேவைக்காக கேன்களுக்கு எரிபொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும்” என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.