நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவருவதையடுத்து மக்கள் தமது அத்தியவசிய தேவைகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களின் தாங்கிக்கொள்ள முடியாத விலை ஏற்றத்துடன், எரிவாயு மற்றும் எரி பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு ஒரு வேளை உணவைக்கூட முழுமையாக உட்கொள்ள முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ள சம்பவம் நாட்டின் நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துச்செலும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
மண்ணெண்ணெய்க்காக 2 கிலோமீட்டர் நீளமான வரிசையில் காத்திருந்த குறித்த பெண் இவ்வாறு மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த இளைஞன் ஒருவர் வழங்கி முதலுதவியை தொடர்ந்து மயக்கத்தை தெளிந்துள்ளார்.
எவ்வாறாயினும் காலை முதல் உணவு, நீரின்றி வரிசையில் காத்திருந்ததன் காரணமாக குறித்த பெண் மயங்கி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியிலும் விரக்தியிலும் உள்ள நாட்டு மக்களை மேலும் கோபப்படுத்துவதாக இந்த சம்வம் பதிவாகியுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரனையுடன் கொழும்பு - புத்தளம் வீதியில் பொலிஸாரின் பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிளோட்ட போட்டி இடம்பெற்றுள்ளமை மக்களை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
எனினும் இந்த போட்டிக்கும் தனக்கும் தொடர்பில்லை என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், பொலிஸாரின் அனுமதி இன்றி இந்த போட்டி நடத்தப்படுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
எவ்வாறாயினும் மக்களின் எதிர்ப்பின் காரணமாக குறித்த போட்டி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தொடர்பில் மற்றொரு செய்தியும் வெளியாகி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நாமல், மாலைதீவில் நீர் விளையாட்டுகளில் ஈடுபட்ட காணொளி வெளியாகியுள்ளதையடுத்து இவ்வாறு அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
அத்தோடு மாலைத்தீவில் உள்ள பறக்கும் பலகை பயிற்றுவிப்பாளர், நாமல் ராஜபக்சவின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனி இல்லாத பொருளாதார நெருக்கடியால் அடிப்படை வசதிகள் இன்றி இலங்கையர்கள் தவித்து வரும் நிலையில், ராஜபக்ச மாலைதீவுக்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன என சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் அமைச்சர் மாலைதீவிற்கு செல்லும் தனது முடிவை நியாயப்படுத்தினார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.
அவர் அங்கு விருதுவழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்- இந்த நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதியும் கலந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சு நடத்தும் விளையாட்டு விருதுவழங்கும் நிகழ்விற்காக நான் மாலைதீவிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்,மாலைதீவு இலங்கைக்கு நெருக்கமான நாடு -விளையாட்டு மற்றும் இளைஞர்கள் குறித்து எங்களிற்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது,என அவர் தெரிவித்துள்ளார்
தனது பயணத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒளிந்திருப்பதன் மூலம் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது நாங்கள் மக்கள் மத்தியில் சென்று சுற்றுலாப்பயணம் செய்வதற்கு இலங்கை பாதுகாப்பான இடம் என்பதை ஊக்குவிக்கவேண்டும்,விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறையில் மாலைதீவு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது,மாலைதீவில் வேலைவாய்ப்புகளை கண்டறியவேண்டும்,மாலைதீவு இலங்கைஇளைஞர்களிற்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இலங்கை உலகநாடுகளை நோக்கி கரங்களை நீட்டவேண்டும்,ஒளிந்திருந்து கொண்டு நாங்கள் முறைப்பாடு செய்ய முடியாது, நாங்கள்தீர்வை காணவேண்டும்,நாங்கள் மக்களின் விரக்திநிலையை புரிந்துகொள்கின்றோம் ஆனால் இதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டு மக்கள் அன்றாட தேவைகளுக்கு அவதியுரும் நிலையில் அரச தரப்பு தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டு மக்களுக்கு எந்த ஒரு நிவாரணத்தையும் இதுவரை அறிவிக்காது இருப்பது கவலைக் குறியதே.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.