உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பால் மாவின் விலை 600 ரூபாவினாலும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 250 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, 1345 ரூபாவாகவுள்ள ஒரு கிலோ பால் மாவின் புதிய விலை 1945 ஆகவும் தற்போது 540 ரூபாவாக உள்ள 400 கிராம் பால் மா பாக்கெட்டின் புதிய விலை 790 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக விலை உயர்த்தப்படவுள்ளது.
உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலை 3900 அமெரிக்க டொலர்களில் இருந்து 4900 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தமை மற்றும் பணமதிப்பு நீக்கம் காரணமாக பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அநியாயமாக இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டால், நுகர்வோருக்கு நீதி வழங்குவதற்கு அமைச்சு தலையிடும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 'Newsfirst' செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை, உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கால்நடை இராஜாங்க அமைச்சர் டி.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூர் பால் மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மில்கோ நிறுவனத்தின் எந்த உற்பத்திகளினதும் விலை அதிகரிக்கப்படமாட்டாது என மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் பால் மா உற்பத்தியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மாதம் ஆரம்பம் முதல் பால்மா விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.