இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீரிகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்றிருந்த நபர், எரிபொருளை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவதற்கு தயாராகிக்கொண்டிருந்த போது மயங்கி வீழ்ந்துள்ளார்.
மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீரிகம பகுதியை சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த மூன்று வயோதிபர்கள் கடந்த சில நாட்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்தை சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மூத்த பிரஜை ஒருவர் நேற்று (20) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கண்டி - யட்டி நுவர பிரதேசத்தில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த 71 வயதுடைய முதியவர் சனிக்கிழமை (19) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மீரிகம பகுதியில் எரிபொருளை கொள்வனவு செய்துவிட்டு திரும்பும் நிலையில் 76 வயதானவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்றிரவு கம்பஹா - நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தையடுத்து இடம்பெற்ற தாக்குதலில் 29 வயதான இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை எரிபொருள் வரிசையில் நின்ற நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில், நேற்று கொவிட் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.