இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெறுக்கடியை சமாளிக்க முடியாது மக்கள் திணறி வரும் நிலையில் வடக்கில் வாழும் மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை, இலங்கைக்கு அருகே உள்ள இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு பேர் அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (21) இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரி கிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர்,மோசஸ் உள்ளிட்ட ஆறு பேர் ஒரு கண்ணாடி இழை படகில் இவ்வாறு தமிழகம் நோக்கி பயணித்துள்ளனர்.
அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியை அடுத்துள்ள 4ஆவது மணல் திட்டு பகுதியில் சென்று இறங்கியுள்ளனர். அங்கு காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த 6 பேரையும் தகவலறிந்த கடலோர காவல்படை மண்டபம் முகாமிற்கு சொந்தமான கப்பல் மூலம் மீட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெறுக்கடிக்கு ஈடுகொடுக்க முடியாது இவ்வாறு இந்த ஆறு இலங்கை தமிழர்களும் தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் குறித்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் பொலிஸார் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக செல்லக் கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.