இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாகவும் அதிலும் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், யுனிசெப் உடன் இணைந்து, பழைய, புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மோதல்கள் நிலவிய பகுதிகளில் காணப்பட்ட பல்கலைக்கழங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது.
"அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் ராகிங் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது" என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 51% க்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3% உளவியல் வன்முறைக்கும், 23.8% உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், 16.6% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இருவரும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டனர், இருப்பினும் கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.
பல்கலைக்கழக ஊழியர்களில் 44% பேர் வாய்மொழி பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 22.3% பேரிடம் பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகவும், 19.9% பேர் உடல்ரீதியான பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. பொதுத்துறை பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில், 21% பேர் வாய்மொழி பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும், 1.5% பேர் பாலுறவுக்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பகிடிவதை பெரும்பாலும் முதல் வருடத்தில் மட்டுமே நடப்பதாகக் கருதப்பட்டாலும், மாணவர்கள் தங்கள் முதலாம் ஆண்டை முடிக்கும் போது துன்புறுத்தல் முடிவுக்கு வராது என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், இலங்கையில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் மேற்பார்வையிடும் UGC, புதிய மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் கூடுதல் விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகள் இப்போது இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொலிஸில் புகார் செய்ய வேண்டும், மேலும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நீண்ட சிறைத்தண்டனை, உயர்கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டுத்தொகை செலுத்துதல் ஆகியவை விதிக்கப்படும்.
புதிதாக சேரும் மாணவர்களை துன்புறுத்துவதில் ஈடுபட மாட்டோம் என அனைத்து மாணவர்களும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.