பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ரெலோ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது.
குறித்த சர்வகட்சி மாநாடானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.
மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இந்த சர்வகட்சி மாநாடானது, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சி என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சர்வகட்சி மாநாட்டில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமாமஜக்கட்சி, எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்றுள்ளன.
கடந்த காலங்களில் சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சர்வகட்சி மாநாட்டை நடத்தும் படி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்த போதும், இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
எனினும் தற்போது அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே, இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பதாகவே பெரும்பாலானோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சர்வகட்சி மாநாடு என்ற பெயரில் ஊடக கண்காட்சி மாத்திரமே இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவரும்,முன்னாள் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திடம் உண்மையாகவே இருக்குமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்களுடன்,பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதனை அமைச்சரவையில் கலந்தாலோசித்து அதன் பிறகு ஏனைய கட்சிகளை ஒன்றினைத்து சர்வ கட்சி கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.