இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.
நேற்று இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி மன்னிப்புக் கோரவேண்டிய நிலை உருவானது.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் தெரிவித்ததடையடுத்து இந்த சூழ்நிலை உருவானது.
“கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார தாக்கம் தீவிரமடைவதற்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என தரப்படுத்தல்கள் ஊடாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை எடுத்துரைத்தார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்” இதன் போது மத்திய வங்கி ஆளுநர் குற்றஞ்சாட்டினார்.
மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த அரசாங்கத்தினால் தான் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை வருந்தத்தக்கது. பொருளாதார பாதிப்பிற்கு அனைத்து அரசாங்கமும் காரணம் என்று குறிப்பிடுவதாயின் விஜயன் காலத்தில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும் என்றார்.
அத்தோடு, அரசியல் நோக்கமில்லாத வகையில் தான் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளோம். இவ்விடயத்தில் அரசியல் பேசுவதை முதலில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடுவது பொருத்தமற்றது. என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அவர் அதிருப்தி வெளியிட்டார்.
இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசியல் காரணிகள் பற்றி பேசும் தருணம் இதுவல்ல. உண்மையான நோக்கில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநரது கருத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.
இதேபோன்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் கூட்டத்தில் திக்குமுக்காட செய்திருந்தார்.
எவ்வாறாயினும் நேற்றைய நாள் கூட்டத்தில் அதிகமாக பேசப்பட்ட நபராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். அவரின் அரசியல் மற்றும் வரலாறு தொடர்பான அறிவினால் அவர், அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.