புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்டை நேற்று (23) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நேற்றுக் காலை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி நுலாண்டிடம் விளக்கமளித்தார்.
வரவேற்புரையாற்றிய உதவிச் செயலாளர், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் உள்ள பசுமைத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமதி நுலாண்ட் தெரிவித்தார்.
நாட்டில் கல்வி வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தில் கொவிட் தொற்றுநோய் மற்றும் பிற நிகழ்வுகளின் தாக்கத்தை குறைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.
நுலாண்ட் இந்த முடிவைப் பாராட்டியதுடன் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் திருத்தம் ஆகியவற்றைப் பாராட்டினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் ஊடாக மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை விரிவுபடுத்துவதற்கு உதவுமாறு தூதுக்குழுவிடம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.