ஜனாதிபதியுடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் சந்திப்பு - மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி கோரும் இலங்கை?உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
அவரது வருகைக்காகவும் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி இதன்போது இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று(28) ஆரம்பமான BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் நேற்றைய தினம்(27) நாட்டுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், சீனி மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இலங்கையின் புதிய கடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இந்திய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவினால் ஏற்கனவே ஒரு பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.இம்மாதம் புதுடில்லிக்கு சென்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஒரு பில்லியன் டொலர் கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார்.
இதனைத் தவிர, இந்தியா இவ்வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் டொலர் கடன் வசதி மற்றும் நாணயப்பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் கடனை வழங்கியிருந்தது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.