மிரிஹான பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சட்டத்தரணி சுபுன் ஜயவீர வீரகேசரிக்கு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் பலர் இன்றைய தினம் மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பல மணிநேரம் அங்கு காத்திருந்தனர்.
அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கும் சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர்.
சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பொதுச்சொத்து துஷ்பிரயோகத்தடுப்புச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடும் என்று மிரிஹான பொலிஸார் கூறியதாக சட்டத்தரணிகள் சிலர் கேசரிக்குத் தெரிவித்தனர்.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த சட்டத்தரணிகளில் ஒருவரான சுபுன் ஜயவீரவிடம் அங்குள்ள நிலைவரம் தொடர்பில் கேட்டறிந்தோம்.
பொலிஸ் நிலையத்தில் 54 பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறிய அவர், அவர்களில் பெண் ஒருவரும் ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்கள் பொலிஸாரால் மிகமோசமாகத் தாக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் நடப்பதற்குக்கூட இயலாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- நன்றி வீரகேசரி
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.