சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில்!இலங்கை நிதியுதவி வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியுதவி பெறுவதற்கான நாட்டத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு பதிலலித்துள்ள சர்வதேச நாணய நிதியம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதுமாத்திரமன்றி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வொஷிங்டன் விஜயத்தின்போது இதுகுறித்துக் கலந்துரையாடப்படும் என்று அந்நிதியத்தின் ஊடாகப்பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
தமது ஒப்பந்தத்தின் 4 ஆம் சரத்தின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையுடனான இருதரப்புக்கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதார நிலைவரம் குறித்த மதிப்பீடுகளை மேற்கொண்டிருந்தது.
இதன்பிரகாரம் இலங்கை பற்றிய சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது.கடன் மீள்செலுத்துகையைப் பொறுத்தமட்டில் இலங்கை மிகமோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும், தற்போது இலங்கையின் வசமுள்ள இருப்பு அண்மையகாலங்களில் மீளச்செலுத்தவேண்டியுள்ள கடன்களைச் செலுத்துவதற்குப் போதுமானதல்ல என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கை தம்மிடம் நிதியுதவிக்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில், அதுகுறித்த பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வொஷிங்டன் விஜயத்தின்போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச நிதிக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் இதுகுறித்துத் தெளிவுபடுத்தியிருந்த உலகவங்கி, நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை அடையாளங்காண்பதற்காக இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.