ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன்பும் பின்னரும் போராட்டக்காரர்கள் பொலிஸாரினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக அத தெரண மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் பலர் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், போராட்டத்தை ஒளிப்பதிவு செய்யும் போது பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் இவ்வாறு தாக்கப்பட்டனர்.
இதன் போது அத தெரண கொழும்பு பிராந்திய ஊடகவியலாளர் நிஸ்ஸங்க வேரபிட்டிய காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று பிற்பகல் நிஸ்ஸங்க வெரபிட்டியவுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே கைது செய்யப்பட்டவர்களுக்காக 300க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் சுயேட்சையாக நேற்று (01) முன்வந்தனர்.
மிரிஹான பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சட்டத்தரணிகள், ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் ஆஜராகி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களை கைதட்டி வரவேற்றது நீதித்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை எனவும், ஒரேயொரு வழக்குக்காக இவ்வளவு அதிகளவான சட்டத்தரணிகள் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.