இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கப்பாடு அவசியம் - ஜெயசங்கர்எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரின் இணக்கப்பாடு அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கருடனான சந்திப்பில், கச்சத்தீவு பகுதியில் இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக எடுத்துரைத்தார்.
தீர்வு ஏதுமின்றி முடிவடைந்த கச்சத்தீவு மீனவர் பேச்சு வார்த்தை தொடர வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
"இந்த விஷயத்தில் அனைவரின் புரிதலுடனும் உடன்பாட்டுடனும் ஒரு தீர்வு காணப்பட வேண்டும்." என்றார்.
அதன்படி, இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.இந்தியாவில் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் இடையே சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்குவது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
வடபகுதி மக்களின் அபிவிருத்தி அபிலாஷைகளை முன்னிறுத்தி காங்கேசன்துறை, இராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரிக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடற்றொழில் அமைச்சர் தேவானந்தா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் பலாலி, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு இடையில் விமான சேவையின் தேவை குறித்தும் காரைநகர் படகு தொழிற்சாலையை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய முதலீட்டாளரை தேடுவது குறித்தும் அமைச்சர் தேவானந்தா இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.