1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய படைகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய இராணுவத்தை சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழையவில்லை என கூறியுள்ள அவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது .

இவ்வாறு பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற 'மித்ர சக்தி' என்று அழைக்கப்படும் இந்திய - இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காகவே இந்த இந்திய இராணுவக் குழு இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை அப்போது வந்தடைந்தன.

மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கங்களுடன் வெளியிடப்படும் இதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் வீணாக பீதியடைய வேண்டாம் என்றும் ஊடக நெறிமுறைகளைப் பேணி சகல ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய இராணுவத்தை இலங்கையில் ஈடுபடுத்துவது குறித்து வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என்பதுடன், அடிப்படையற்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியை இந்திய உயர்ஸ்தானிகராலயம் முழுமையாக நிராகரித்துள்ளது.இவ்வாறான பொறுப்பற்ற செய்தி அறிக்கையிடலை வன்மையாக கண்டிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி