பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று (05) பாராளுமன்றம் கூடவுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
10 பங்காளிக் கட்சிகளின் 16 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் தனித்தனியாக சுயேச்சைக் குழுக்களாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் தனித்தனி குழுக்களாக அமரவுள்ளனர்.
அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை அழிக்கும் நோக்கில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களின் இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உரப்பிரச்சினை காரணமாகவே இந்த நெருக்கடி ஆரம்பமானது என்றும் அது அரசாங்கத்தின் மீதான வெறுப்பாகவே தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளதாகவும், ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை நியமிக்கப்படும் போது சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு கூடுகின்றது.
எனினும் அமைச்சர்கள் பதவி விலகி இருப்பதுடன் 4அமைச்சர்கள் மாத்திரமே நியமி்க்கப்பட்டிருப்பதால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுமா என்பது சந்தேகமாகும் .
அத்தோடு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இல்லாமல் பாராளுமன்ற விவாதத்தை கொண்டுசெல்வது சாத்தியமில்லை.
அதனால் இன்றைய தினம் பாராளுமன்றம் கூடிய பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று, அதன் பின்னரே பாராளுமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு கொண்டுசெல்வது என தீர்மானிக்கப்படும் என தெரியவருகின்றது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.