இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் ஜனாதிபதியின் முயற்சியானது வெறுமனே அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பலனற்ற நடவடிக்கை என்றே தோன்றுவதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடித் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையையும் மக்களின் கோரிக்கைகயையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இது சரியான தீர்வு அல்ல என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை பொது இணக்கப்பாட்டிற்கு வருமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கரு ஜயசூரிய வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு, நாட்டில் அசாதாரண சூழல் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொது இணக்கப்பாட்டிற்கு வருமாறுவதே உகந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இணக்கப்பாடானது அனைத்துக் கட்சிகளும் அங்கம்வகிக்கும் அரசாகவோ அல்லது நாட்டிலுள்ள ஒருசில குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்ட ஆட்சியதிகாரமாகவோ இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு நாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள அவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்புடனோ அல்லது இணக்கப்பாட்டின் ஊடாகவோ தற்காலிக காபந்து அரசாங்கத்தை நிறுவுவது உகந்தது என்ற பரிந்துரையை முன்வைத்திருக்கின்றார்.
காபந்து அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டிய 3 பரிந்துரைகள் தொடர்பிலும் அவர் விளக்கியுள்ளார்.
“முதலில் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்குத் தீர்வுகண்டு, செயற்திறனான ஆட்சியை முன்னெடுப்பதற்கு அவசியமான அடிப்படைத் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பாராளுமன்றத்தை பலவீனமடையச்செய்து தனிநபருக்கு அதிகாரங்களை வழங்கியிருக்கும் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்வது அதன் முதல் கடமையாக இருக்க வேண்டும்.
அதேபோன்று அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்கி, அதன் அடிப்படை நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்திற்குச் செல்வது பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.
இரண்டாவதாக கடன்களை மீளச்செலுத்துதல் தொடர்பிலான நெருக்கடிகளை கண்டறிந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்கள், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் உதவியுடன் அவற்றுக்குத் தீர்வுகாணவேண்டும்.
மூன்றாவதாக காபந்து அரசாங்கம் அதிகாரத்திற்குவந்து 18 மாதங்கள் பூர்த்தியடைவதற்கு முன்னர் நாட்டின் அரசியலமைப்பில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.
அதன்போது மட்டுமீறிய அதிகாரங்களைக்கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக, இறையாண்மையையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பும் வகையிலான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றவேண்டும்.
இவற்றைப் பூர்த்திசெய்ததன் பின்னர் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு நாட்டுமக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கி உடனடியாக தேர்தலுக்குச் செல்லவேண்டும்” என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#