ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பாராளுமன்றத்தில் கோருவதற்கான சாத்தியக்கூறுகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் அவசரமாக அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாட்டின் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஜனாதிபதியை பதவி விலக செய்வதற்கு பாராளுமன்றத்தின் தலையீட்டை பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நாடியுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு ஜனநாயக உரிமை கிடையாது என சபாநாயகர் அதனை நிராகரித்துள்ளார். தற்போதைய நெருக்கடியை ஜனநாயக வழிகளில் மட்டுமே தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வை உருவாக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன், இடைக்கால அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.ஏற்கனவே 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயேச்சையாக அமர்வதாக உறுதியளித்ததையடுத்து அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மை ஆட்டம் கண்டது.
எவ்வாறாயினும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக செயற்படும் தமது முடிவிலிருந்து பின்வாங்கியதாக தெரியவருகின்றது.
இதன்படி தற்போது 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயேச்சையாக செயற்பட உள்ளனர்.இதற்கிடையே அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்றக் குழு நேற்று (ஏப்ரல் 05) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து சுமார் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர, கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் கட்சியின் நாடாளுமன்றக் குழு தொடர்ந்தும் சுயாதீனமாக சபையில் அமரும் என தெரிவித்தார்.