கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய தூதரகம் இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் நிலையில் நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
வீதி ஓரங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன் டீசலினை பெறுவதற்காக கேன்களும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடல் தொழில் உள்ளிட்ட ஏனைய கைத்தொழில்களும் பாதிக்கப்படுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதரம் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ள மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களையும் மேற்கொண்டுவருகின்றனர்.
இதனிடையே மின் உற்பத்திக்கும் தேவையான எரிபொருளை விநியோகிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.
இவ்வாறு நாட்டில் தற்போதைய எரிபொருள் தேவையானது பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில் நாட்டிற்கு தற்போது கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருள் அளவு போதுமானதாக இருக்குமா அல்லது இன்னும் எத்தனை தினங்களுக்கு இது போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகின்றது.
எவ்வாறாயினும் இதற்கான நிரந்தர தீர்வு இப்போதைக்கு அரசாங்கத்திடம் இல்லை.
இதனிடையே, நாடு உணவுத்தட்டுபாட்டை எதிர்கொள்ளும் என சபநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற, தேவையானது அரசியல் மாற்றம் மட்டுமா என்ற கேள்வியும் உள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.