நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசியலமைப்புக்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த தீர்வும் நிரந்தரமாகாது அது தொடர் பிரச்சினைக்கே வழி வகுக்கும் என முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இரண்டாவது நாளாக இடம்பெற்பட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் அங்கு தெடார்ந்து தெரிவிக்கையில்,வீதிகளில் இறங்கியுள்ள மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்திற்கு மட்டுமானதல்ல. பாராளுமன்றத்திலுள்ள 225 பேருக்குமானது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாகவே மக்கள் வீதியில் இறங்கி யுள்ளனர்.
நாம் மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்துள்ளோம். அதற்கிணங்கவே அவசரகாலச் சட்டம் மீளப் பெறப்பட்டுள்ளது. அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சியினருக்கு நாம் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்.
அமைச்சுப் பதவிகளை ஏற்று இணைந்து செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நாம் பிரச்சினைகளை நன்றாக அறிந்தே எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். நெருக்கடிகள் நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோன்று நிதி தொடர்பான ஆலோசனைக் குழுவொன்று ஜனாதிபதி நியமித்துள்ளார். அந்த குழுவில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட 3பேர் இருக்கின்றனர்.அதனால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை நாம் முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலேயே இப்போது சிந்திக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.
யார் நாட்டை ஆளுவதற்கும் முதலில் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை அமைத்து சிறந்த ஆலோசனைகளையும் ஹர்ஷ போன்றோரின் திறமைகளை பயன்படுத்துவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும். அதற்காக நாம் மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம்.
அரசியலமைப்பிற்கு வெளியில் செயல்பட்டு தற்போதைய எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாது. தற்போதைய மின்சார நெருக்கடிக்கு நீர் மின் உற்பத்தி இல்லாவிட்டால் முழுமையான தீர்வு காண முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நாம் ஒரு பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமோ உலக வங்கியிடமோ செல்ல வேண்டியுள்ளது.நாட்டில் நிலையான தன்மை இல்லாவிட்டால் அமைச்சர்கள் இல்லாவிட்டால் எவ்வாறு அங்கு செல்ல முடியும்? யார் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.
அதனால் அரசியலமைப்பை மீறி அரசியல் ரீதியாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. அது நிரந்தரமான தீர்வாக முடியாது. நூற்றுக்கு 80 வீதம் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக அந்த தீர்வு அமையவேண்டும்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள ஆலோசனைக்கிணங்க நாம் எமது நட்பு நாடுகளுடன் ஒரு கழகம் அமைத்து நிதி தொடர்பான உதவிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா,சீனா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளடங்கியதாக அது அமைய வேண்டும்.
நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல், நாடு என்ற வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். என்றார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.