நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும்.
அதனால் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை எந்த காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் காரணத்தினால் நாட்டின் இளம் தலைமுறையினருடன் இணைந்து, சிவில் மக்கள் தமது எண்ணங்களை நேரடியாக வெளிப்படுத்துகின்றனர்.
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களை மையமாகக்கொண்டு அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தற்போது தலை நகரை மையமாகக் கொண்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இந்த போராட்டங்களின் போது அவர்கள் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பாராட்ட வேண்டும். அதேபோன்று நாட்டின் அரசியலமைப்பு குறித்து அவர்கள் முன்வைக்கும் திருத்தங்கள் தொடர்பிலான பரிந்துரைகளையும் நாட்டு மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆனால் இதுவரை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து இல்லை.
அதன் காரணத்தினால் இளம் சமுதாயத்தினரின் குரலுக்கு தாமதமின்றி செவிசாய்த்து அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் திருத்தங்கள் தொடர்பில் அவர்களுடன் முறையான கலந்துரையாடலுக்கு செல்லுமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் வலியுறுத்துகின்றோம்.
அதற்கமைய நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேபோன்று இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை எந்த காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இந்த நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம்.
ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும். அதேபோன்று இவர்களை தவறான வழிக்குத் திசை திருப்புவதற்கு சில தரப்புகள் முயற்சிக்கும் அபாயம் இருக்கின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் எந்தக் காரணத்திற்காகவும் நாட்டின் அமைதிக்கு பாதகம் ஏற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதற்கான பிரதான கடமை தற்போதைய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் உள்ளது. அதேபோன்று ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் அந்த பொறுப்பு இருக்கின்றது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
அதற்கமைய இளம் சமுதாயத்தினரின் குரலுக்கு தாமதமின்றி செவிசாய்க்குமாறு அரசாங்கத்திடமும் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். இளைஞர்கள் எதிர்பார்க்கும் அரசியல் திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அனைத்து அரசியல் கட்சிகளும் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். என்றார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.