காலிமுகத்திடலில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் இளைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ராஜபக்ஷ வம்சத்தின் இளம் அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடலில் இணைந்துள்ள சமூகவலைத்தள தலைவர்கள் சிலரின் கருத்துகளை பயன்படுத்தி நாமலை பிரதமராக்குமாறு பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி முகத்திடல் சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துமாறு அலரிமாளிகையின் ஊடகப் பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசியல் நெருக்கடியை உணர்ந்து பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை உடனடியாக கலைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர்.
'சுயேட்சை நாடாளுமன்றக் குழு'வும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்தியில் இன்று (13) காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பிரதமரின் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.