ஜனாதிபதி, பிரதமரை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடல் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டக்களத்துக்கு பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம் பலரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதன் போது மக்களிடம் பேசிய குறித்த பொலிஸ் அதிகாரி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சகிக்க முடியாது என தெரிவித்தார்.
இரத்தனபுரியை சேர்ந்த தாம், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் மாணிக்ககல் சுரங்கங்களில் வேலைசெய்து வாழ்க்கையை நடத்துவதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.
அத்துடன் தன்னை போலவே மனச் சாட்சியுடன் போராடும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இருப்பதாக தெரிவித்த அந்த உத்தியோகத்தர், அவர்களுக்கும் போராட்டக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இவ்வாறான நிலையில், தன் மனச்சாட்சியை திறந்து போராட்டத்துக்கு ஆதரவளித்த குறித்த பொலிஸ் சார்ஜன் தற்போது, பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.