காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்தப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் அமைப்பினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் கடந்த ஏழு நாட்களாக தற்போதைய அரசை வீட்டுக்குச்செல்லுமாறு கோரி கோட்டாபய வீட்டுக்கு போ என கோசமெழுப்பியவாறு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
இந்த போராட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் பங்குபற்றி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு தமது ஆதரவினை அளிக்க முன்வருமாறு ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (9) கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம் 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
ஜனாதிபதி வீடு செல்லும் வரை தாம் வீடு செல்ல போவதில்லை என்ற உறுதிப்பாட்டில் உள்ள மக்கள் சித்திரை புத்தாண்டையும் இன மத பேதங்கள் இன்றி கொண்டாடினர்.
அதுமாத்திரமன்றி கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ள போராட்டப்பகுதியில், மருத்துவ நிலையம், நூலகம், ஓவியங்கள் வரைவதற்கான நிலையம், சட்ட உதவி வழங்கல் நிலையம், கையடக்கத்தொலைபேசி இலத்திரனியல் உபகரணங்களுக்கான மின்னேற்ற நிலையம் ஆகியவற்றுக்கென பிரத்தியேக கூடாரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அத்தோடு துரித இணைய வலையமைப்பு வசதியைப் பெறுவதற்கு ஏற்றவாறு இணையக்கோபுரமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அமைதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் இளைஞர்களின் இந்த போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும் ஆர்ப்பாட்டப்பகுதியை அன்மித்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை மக்களை கொச்சம் அச்சப்படுத்தும் வகையிலிலேயே உள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.