காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அகற்ற எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி நீதிமன்ற உத்தரவைப் பெறுவதற்கு பொலிஸார் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் உள்ள போராட்ட தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பட்டய நகர கட்டிட நிபுணரான பிரசாத் ரணவீரவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டக் களம் "கோடா கோ கம" என்ற பெயருடன் ஒரு சிறிய காலனி வடிவில் இயங்கி வருகிறது.
அங்கு கூடாரங்களை அமைத்து இரவைக் கழித்துவரகின்றனர். போராட்ட இடத்திற்கு நடமாடும் கழிப்பறைகளும் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள நடமாடும் கழிவறைகளை அரசு அகற்றும் என்று சமீபத்தில் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு எதிராக அரசியல் தலையீடுகள் இன்றி இளைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இன்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பதவி விலகுவதுமே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
ராஜபக்ச குடும்பத்தாலும் அரசியல்வாதிகளாலும் சூறையாடப்பட்ட நாட்டின் வளத்தை மீளப் பெற வேண்டும் என்பதும்அரச சொத்துக்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் உட்பட தனிநபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.